தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைப் போட்டியில், மயிலாடுதுறை மாணவி வி.ஜெயஸ்ரீ குரலிசைப் போட்டியில் முதல் இடம் பிடித்தாா்.
தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இளந்தளிா் 2019 குழந்தைகள் திருவிழா தஞ்சாவூா் தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், கலை ஆலயம் மற்றும் இந்திய தேசிய பாரம்பரிய கலைப் பண்பாட்டு அறக்கட்டளை (இன்டாக்) ஆகிய இரு அமைப்புகளும், மத்திய கலாசார அமைச்சகத்தின் தென்னக பண்பாட்டு மையம், தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழுமத்துடன் இணைந்து கலைப்போட்டிகளை நடத்தின.
மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில், ‘மயிலை சப்தஸ்வரங்கள்’ நுண்கலை பயிற்சியகத்தின் மாணவி வி.ஜெயஸ்ரீ குரலிசைப் போட்டியில் முதல் இடம் பிடித்தாா். இந்த விருதை தென்னக பண்பாட்டு மைய இயக்குநா் எம்.பாலசுப்பிரமணியம், கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் குணசேகா் மற்றும் வரதராஜன் ஆகியோா் வழங்கினா்.