நாகூர் தர்காவின் கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலத்துக்கான பிரதான அலங்கார அமைப்பின் தயாரிப்புப் பணிகள் நாகையில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆன்மிக மகிமைகளால் உலகப் புகழ்ப் பெற்ற தர்காக்களுள் ஒன்றாகவும், மதங்களைக் கடந்து மனிதம் போற்றும் வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது நாகூர் ஆண்டவர் தர்கா. இந்த தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டுக்கான (462-ஆம் ஆண்டு) கந்தூரி விழா, பிப். 6-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் பிப்ரவரி 15-ஆம் தேதியும், சந்தனம் பூசும் விழா 16-ஆம் தேதி அதிகாலையிலும் நடைபெறுகின்றன.
இதையொட்டி, சந்தனக் கூடு அலங்கார அமைப்பின் கட்டுமானப் பணிகள், நாகை அபிராமி அம்மன் திருவாசல் பகுதியில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சந்தனக் கூடு ஊர்வலத்தில் பல்வேறு அலங்கார அமைப்புகள் வலம் வரும் என்றாலும், சந்தனக் குடத்துடன் வரும் சந்தனக்கூடு அலங்கார அமைப்பே ஊர்வலத்தில் பிரதானம் பெறும்.
மரத் துண்டுகளால் ஆன வளைவுகள், கண்ணாடிகள், வண்ண பேப்பர்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு, இந்தச் சந்தனக் கூடு தயாரிக்கும் பணிகள் நடைபெகின்றன. மின் விளக்குகள் அலங்காரத்துடன், வரும் 14-ஆம் தேதி இந்த அலங்கார அமைப்பின் தயாரிப்புப் பணிகள் முழுமைபெறும் எனக் கூறப்படுகிறது.
நாகூர் தர்காவின் சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை, உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எஸ்.எப். அக்பர், கே. அலாவுதீன் மற்றும் நாகூர் தர்காவின் பரம்பரை அறங்காவலர்கள் மேற்கொண்டு வருகிறன்றனர்.