திருக்குவளை அருகே விவசாயி ஒருவர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மடப்புரம் களத்திடல்கரையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (55). விவசாயி. இவர் தனது வயலில் அறுவடை செய்த நெல்லை அப்பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன் எடுத்துச் சென்றாராம். நாளொன்றுக்கு 700 சிப்பம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுவதால், அவரை திங்கள்கிழமை வருமாறு கூறியுள்ளனர். அதன்படி, அவர் மீண்டும் சென்று தனது நெல் மூட்டையைத் தூக்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையத்தில் நாளொன்றுக்கு 700 சிப்பம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லைத் தக்க சமயத்தில் கொள்முதல் செய்து உரிய நேரத்தில் பணத்தொகையைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். மேலும், வங்கிக் கணக்கில் ஒரு வாரம் கழித்தே நெல்லுக்கான பணம் செலுத்தப்படுவதால், விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே இந்த பிரச்னைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர்.