பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கத் தவறினால், 13 கிராம விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள பெரம்பூரில் தெற்குராஜன் வாய்க்கால் பாசனதாரர் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். விவசாயிகள் கஜேந்திரன், செயலர் காமராஜ், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னோடி விவசாயி செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த 2017-18 -ஆம் ஆண்டுக்கு விவசாயிகளின் சம்பா நெற்பயிருக்கு உண்டான காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் விடுவித்தும், இதுவரை விவசாயிகளுக்கு வழங்காததற்கு கண்டனம் தெரிவிப்பது. இன்னும் 15 நாள்களுக்குள் விவசாயிகளுக்கு சேர வேண்டிய காப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் 13 கிராம விவசாயிகள் ஒன்று திரண்டு கொள்ளிடத்திலிருந்து சீர்காழிக்குச் செல்லும் தேசிய நெடுச்சாலையில் புத்தூரில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் கலையரசன் நன்றி கூறினார்.