செம்பனார்கோவில் அருகே இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் புங்கையன்தோப்புத் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் சதீஷ் (25). ஓட்டுநரான இவரும், அதே கிராமம் காமராஜபுரம் தெருவைச் சேர்ந்த கெளசல்யா (21) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக கௌசல்யா செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுக் கொண்டாராம். அவரை, சதீஷ் மீட்டு ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு, கௌசல்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையறிந்த கெளசல்யாவின் உறவினர்கள், அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும், சதீஷ் காரணமாக இருக்கலாம் எனவும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
பின்னர், கெளசல்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சதீஷை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.