திருக்குவளை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிரில் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருக்குவளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தற்போது சம்பா அறுவடை பணிகள் நிறைவுபெற்றுள்ளது. கஜா புயல் தாக்குதல் மற்றும் நெல் பழ நோய் தாக்குதலினால் சம்பா சாகுபடி போதிய மகசூலை அளிக்காததை தொடர்ந்து, உளுந்து பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சம்பா சாகுபடியில் கிடைக்காத மகசூலை உளுந்து பயிர்களில் பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தோடு உளுந்து பயிர்களை பயிரிட்டு, தற்போது, உளுந்தஞ் செடிகள் பூத்து காய்க்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில், ஒருசில செடிகளில் பச்சைப் புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், மகசூல் குறைந்து விடுமோ என்ற கவலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:
இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிரானது நன்கு பூத்து, காய்க்கும் நிலையில் உள்ளது. ஆனால், ஒரு சில விவசாயிகள் தக்க சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காததால் பச்சைப் புழு தாக்குதல் நோய் ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெயிலால் உளுந்து பயிர்கள் வாடி வருகின்றன. இதனால், மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாய்களை தூர்வாரி உளுந்து பயிர்களுக்கு நீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றார்.