பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலர் ஆ. பஹ்ருதின் வெளியிட்டுள்ள அறிக்கை: உயர் சாதியினரின் வாக்கு வங்கியை குறி வைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய சமூகத்தினருக்குத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது சமூக அநீதியாகும். இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி பாஜக அரசு செயல்பட்டுள்ளது.
இந்திய அளவில் கல்வி மற்றும் சமூக ரீதியில் பின் தங்கியும், தேசிய அளவில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் அதிகமாக உள்ள சமூகம் இஸ்ஸாமிய சமூகமே. இதுமட்டுமன்றி, அடிப்படைக் கல்வி, வேலைவாய்ப்பு, கழிப்பறை வசதி, சொந்த வீடு, வருமானம் உள்ளிட்ட அனைத்திலும் தேசிய அளவில் மிகவும் பின்தங்கிய சமூகமும் கூட. அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்களின் அறிக்கைகளும் இதையே தெரிவித்துள்ளன. முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்பதே இவ்விரு கமிஷன்களின் பரிந்துரைகளாகும். இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி இஸ்லாமிய சமூகம் பல ஆண்டுகளாக போராடியும் வருகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் செயல்படும் மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.