சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தை செவ்வாய்க்கிழமையையொட்டி, உண்டியல் பூஜை மற்றும் தை உத்ஸவத்துக்கான பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
இதில் தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் பங்கேற்று பந்தல்காலுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.
நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் தை மாத பிறப்பையொட்டி வரவு, செலவு கணக்குகள் தொடக்கம், உண்டியல்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. அதன் பின்னர், தை மாத உத்ஸவங்களின் தொடக்கமாக கற்பக விநாயகர் சன்னிதி முன்பு பந்தல்கால் நடப்பட்டு, அதற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று, பந்தல்காலுக்கு தீபாராதனை காட்டினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.