கடந்த 2017-2018 மற்றும் 2018-2019- ஆம் கல்வி ஆண்டுகளில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகை மாவட்டம், கீழ்வேளூரில் மனு அளிக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
2017- 2018 மற்றும் 2018- 2019 -ஆம் கல்வி ஆண்டுகளில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்படாததைக் கண்டித்தும், இந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் தேதியைக் குறிப்பிட்டு ஒரு வார காலத்துக்குள் பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிடக் கோரியும் இந்திய மாணவர் சங்க நாகை மாவட்ட நிர்வாகிகள், கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தனர். முன்னதாக, கீழ்வேளூர் கடைவீதியிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை அவர்கள் பேரணியாகச் சென்றனர். மாணவர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் அன்பு ஸ்ரீதர் தலைமை வகித்தார். அமைப்பின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குணசீலன், கார்த்திக், பர்கான், நிஜி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவர்கள் மனு...
இதேபோல், 2017-2018-ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக் கோரி நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் கல்லூரி மாணவர்கள் மனு
அளித்தனர்.
நாகையில் உள்ள ஒரு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் பயின்று, பள்ளிக் கல்வியை நிறைவு செய்து, தற்போது பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் தங்களுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை எனவும், ஏற்கெனவே செய்யப்பட்ட ஒதுக்கீடுப்படி தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.