திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பகுதியில் குளங்கள் தூர்வாரும் பணியை பேரூராட்சி செயல் அலுவலர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குற்றாலிங்கம், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் உள்ள கரிக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யும் பணியை பேரூராட்சி செயல் அலுவலர் ஆ. நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் தெரிவித்தது:
தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பருவ நிலை மாற்றத்தின் காரணமாக சரிவர மழை பெய்யவில்லை. குறிப்பாக நிகழாண்டு இப்பகுதியில் கோடை மழையே இல்லை என்கிற அளவுக்கு வறட்சியின் கோரம் உள்ளது. இதனால், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்று, பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வறட்சியை சமாளிக்க பேரூராட்சியில் உள்ள நீர்நிலைகளை சுத்தம் செய்து, மழை நீரையும், காவிரி நீரையும் சேமித்து பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இதில், பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் கோவிந்தராஜன், அமானுல்லா, அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.