குறைந்த வாடகையில் மரம் அறுக்கும் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கஜா புயலின்போது, நிலங்களில் முறிந்த அல்லது வேருடன் சாய்ந்த மரங்களை சிறு துண்டுகளாக அறுத்து விரைவாக அப்புறப்படுத்தவதற்கு வசதியாக கனரக வகை மரம் அறுக்கும் கருவிகளும், மரத்துண்டுகளைத் துகளாக்கும் கருவிகளும் வேளாண் பொறியியல் துறை மூலம் வாங்கப்பட்டுள்ளன. இதில், 205 கனரக வகை மரம் அறுக்கும் கருவிகளும், 14 துகளாக்கும் கருவிகளும் நாகை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கனரக வகை மரம் அறுக்கும் கருவிகள் ஒரு மணிக்கு ரூ. 85 என்ற வாடகையிலும், டிராக்டருடன் பொருத்தப்பட்ட துகளாக்கும் கருவிகள் ஒரு மணிக்கு ரூ. 340 என்ற வாடகையிலும் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வழங்கத் தயாராகக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த வாடகை இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் மயிலாடுதுறை அல்லது நாகையில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.