மயிலாடுதுறையில் 2-ஆவது நாளாக நகராட்சிக்கு உள்பட்ட மகாதானத்தெரு, பழைய ஸ்டேட் வங்கி சாலை, பெரிய கடைத்தெரு, விஜயா திரையரங்கம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் பகுதியில் தரைக்கடைகளை அகற்ற வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் 25 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 2 ஜேசிபி இயந்திரங்கள், 3 டிராக்டர்கள் உபயோகப்படுத்தப்பட்டன. காலை தொடங்கிய பணி, மாலை வரை நீடித்தது. மேலும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், மின்வாரிய ஊழியர்கள் ஆகியோரும் ஈடுபட்டனர். காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில், 25-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த நிழற்கூறைகள், வராண்டா, விளம்பர பதாகைகள் ஆகியவை அகற்றப்பட்டன. புதிய பேருந்து நிலையம் பகுதியில் தரைக்கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நகராட்சி ஆணையர் நேரில் வரவேண்டும் என வற்புறுத்தினர். ஆனால் நகராட்சி ஆணையர் அவ்விடத்துக்கு வராததால், வெண்டிங் கமிட்டியை கூட்டி ஆலோசிக்காமல் கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, மயிலாடுதுறை நகராட்சி ஆணையரிடம் கலந்தாலோசித்து இப்பிரச்னைக்கு சுமுக உடன்பாடு காணுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.