மக்கள் குறைதீர் கூட்டம்: ரூ. 61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 18th June 2019 07:47 AM | Last Updated : 18th June 2019 07:47 AM | அ+அ அ- |

நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ. 61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாட்கோ சார்பில் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு ரூ. 39 லட்சம் வங்கிக் கடனுதவி மற்றும் ரூ. 18.21 லட்சம் மானியத்துடன் ரூ. 60 லட்சத்துக்கான கடனுதவிகளும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை உத்தரவுகளையும் ஆட்சியர் வழங்கினார். இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 257 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்திலிருந்து 20 மனுக்களும் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எம். வேலுமணி, மாவட்ட மேலாளர் தாட்கோ ஜெ. நெப்போலியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.