சீர்காழி அருகே உள்ள அகணியில் பழுதடைந்த வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீர்காழி அருகே அகணி ஊராட்சியில் கீழஅகணியிலிருந்து மேல அகணி செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலின் குறுக்கே சிறுபாலம் சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் கான்கிரீட்சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் இரண்டு இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், பள்ளி வேன்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவரமுடியாத நிலையுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள், மாணவ-மாணவியர், அருகில் உள்ள குளத்துக்கு ஆடைகளை சலவைக்கு கொண்டு செல்லும் சலவைத் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த பாலத்தை அகற்றிவிட்டு, வளர்ச்சி நிதியில் புதிதாக பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.