அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் மீட்கப்பட்டன: அமைச்சர் ஓ.எஸ். மணியன்
அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பெருமிதம் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நாகை மாவட்ட அதிமுக சார்பில் கீழ்வேளூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அதிமுக நாகை மாவட்டச் செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பேசியது:
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் தமிழகம் தொழில் துறையில் அபரிமிதமான வளர்ச்சி பெற்றுவருகிறது. வேளாண்மைத் துறையிலும் வளர்ச்சிப் பெற்றுள்ளது. வறட்சி, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் எப்போதெல்லாம் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டார்களோ அப்போதெல்லாம் அதிமுக அரசால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
சூழ்ச்சியால் அதிமுகவை வீழ்த்திவிடலாம் என சிலர் கனவு காண்கிறார்கள். அதற்கு ஒருபோதும் தமிழக மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள். பிற அரசியல் கட்சிகளால் தாரை வார்க்கப்பட்ட தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் அதிமுக அரசு மேற்கொண்ட தொடர் சட்டப் போராட்டங்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு நன்றியுடையவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றார் அமைச்சர்.
கூட்டத்துக்கு, அதிமுக கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எம். சிவா தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் என். மீனா, நாகை ஒன்றியச் செயலாளர் கே. குணசேகரன், நாகை நகர செயலாளர் தங்க.கதிரவன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கீழ்வேளூர் ஒன்றியத் துணைச் செயலாளர் எம். அசோகன் வரவேற்றார். மாவட்டப் பிரதிநிதி வி. விஷ்வேஸ்வரன் நன்றி கூறினார்.