ஆபாச படங்களைக் காட்டி இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நாகையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
நாகை, வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சுந்தர் (23) . கார் ஓட்டுநர். இவர், நாகை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். சுந்தரின் நடத்தையில் சந்தேகமடைந்த அந்த பெண், சுந்தரிடம் பழகுவதைத்
தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 15-ஆம் தேதி சுந்தர் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, காரைக்காலுக்கு அழைத்துச் சென்றாராம். பின்னர், அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து, தகாத முறையில் நடந்து கொண்டதுடன், அதை செல்லிடப்பேசியில் படம் பிடித்து வைத்துக்கொண்டு, அதைக் காட்டி மிரட்டி, அந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளாராம்.
இதுகுறித்து, அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், கீழ்வேளூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சுந்தரை சனிக்கிழமை கைது செய்தனர். பின்னர், நாகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.