செம்பனார்கோவில் அருகே சட்ட விரோதமாக சாராயம் விற்கப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் மடப்புரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாராய விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, பாலகிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், பிணையில் வெளியே வந்த பாலகிருஷ்ணன் மீண்டும் சாராய விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. அவரது வீட்டில் புதுச்சேரி சாராயம் பதுக்கிவைக்கபட்டிருப்பதாக அப்பகுதி மக்களுக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் சனிக்கிழமை மதியம் பாலகிருஷ்ணன் வீட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயப் பாக்கெட்டுகளை ஆக்கூர்- மயிலாடுதுறை சாலையில் கொட்டி அழித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, சாராய விற்பனையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.