சீர்காழி அருகே சனிக்கிழமை பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து நேரிட்டது.
சென்னை எண்ணூரிலிருந்து திருவாரூக்கு பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி, சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் நெடுஞ்சாலையில் அட்டகுளம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த கார் டேங்கர் லாரி மீது மோதியது. இதில், டேங்கர் லாரியின் முன்பக்க சக்கரம் சேதமடைந்து, எதிரே குத்தாலத்திலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி, சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
இந்த விபத்தில், குத்தாலத்திலிருந்து சென்ற காரில் பயணம் செய்த இ. விஷாலி (21) என்ற பெண் காயமடைந்தார். அவரை சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சீர்காழி தீயணைப்பு நிலையத்திலிருந்து, வீரர்கள் விரைந்து வந்து, டேங்கர் லாரி தீப்பற்றாமலிருந்து, அதன் மீது சோப்புக் கரைசலை பீய்ச்சி அடித்தனர். பின்னர், கிரேன் வரவழைக்கப்பட்டு, பள்ளத்திலிருந்து லாரி மீட்கப்பட்டது. இதுகுறித்து, லாரி ஓட்டுநரான மயிலாடுதுறை திருமங்கலத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் கொடுத்த புகாரின்பேரில், வைத்தீஸ்வரன்கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி மீது மோதிய காரின் ஓட்டுநரான பண்ருட்டியைச் சேர்ந்த கார்த்திகை கைது செய்தனர்.