நாகை- விழுப்புரம் நான்கு வழிச்சாலை திட்டத்தின்கீழ், கையகப்படுத்தப்படவுள்ள நிலத்துக்கு சொற்ப தொகை இழப்பீடாக வழங்கப்படுவதால், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
நாகப்பட்டினம்- விழுப்புரம் இடையே ரூ.6,431 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு அதற்காக நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடம், தைக்கால், புத்தூர், எருக்கூர், சீர்காழி, சட்டநாதபுரம், காரைமேடு, தென்னலக்குடி, காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், கருவிழந்தநாதபுரம், ஆக்கூர்முக்கூட்டு, பூந்தாழை உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
நிலத்தின் குறைந்தபட்ச சந்தை மதிப்பு ரூ.200 வரை உள்ள நிலையில், சதுர அடிக்கு ரூ.6 முதல் ரூ.18 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியல், பிச்சை எடுக்கும் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள்கோயிலில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலம் மற்றும் வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்காத அரசைக் கண்டித்து அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுவது, மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது.