நாகை அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவர சுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திர பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேவாரம் பாடிய மூவராலும் பாடல்பெற்ற காயாரோகணசுவாமி திருக்கோயில் அருகே அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்திரனின் சாபத்தைப் போக்கி மீண்டும் அரசாட்சி அருளிய தலமாக இத்தலம் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய சிறப்பையுடைய அமரநந்தீசுவர சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரமோத்ஸவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு இவ்விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள், யாக பூஜைகள் நடைபெற்றன. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவர சுவாமி திருத்தொண்டர் சபையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.