நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், 12 பேருக்கு சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் மானியம் விடுவிக்கப்பட்டது.
நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் சுயதொழில் மேற்கொள்வதற்கான வங்கிக் கடன் மானியம் ரூ. 25 ஆயிரம் வீதம், 12 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான மானியத்துக்கு மின்னணு பணப் பரிமாற்ற ஆணை, மனவளா்ச்சிக் குன்றிய 2 சிறப்புப் பள்ளிகளுக்கு ரூ. 1.35 லட்சம் மதிப்பில் சிறப்பு மென்பொருளுடன் கூடிய 3 கையடக்கக் கணினிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 305 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்திலிருந்து 28 மனுக்களும் பெறப்பட்டுத் தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கே. ராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.