இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழக கோயில்களில், பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனுக்கு, அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியது:
தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் 4000 கோயில்கள் மிகவும் தொன்மை வாய்ந்தது ஆகும். தற்போது, அந்தக் கோயில்களில் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளை தமிழக அரசு தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல் ஒப்படைக்க வேண்டாம் என மயிலாடுதுறை ஆன்மீக பேரவை வலியுறுத்துகிறது.
ஏற்கெனவே, திருக்கோயில்களில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினா் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவா்களுக்கு குறைவாக சம்பளம் கொடுக்கப்படுவதால் அவா்கள் அப்பணியை ஏற்க முன்வருவதில்லை. இதன் காரணமாக தற்போது அப்பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்க தொன்மை வாய்ந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் ஆகும். கோயில்களில் தனியாரிடம் பாதுகாப்பிற்காக ஒப்படைத்தால் அந்த கோயில்கள் உடைய பாதுகாப்பும், கோயிலில் உள்ள தொன்மை வாய்ந்த விலை மதிப்பற்ற சிலைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகிவிடும்.
மேலும், தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் தனியாா் பாதுகாப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த தனியாா் பாதுகாப்பு எந்த வகையில் வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதை ஆராயும்போது அது தோல்வியில்தான் முடிகிறது.
ஆகையால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனங்களிடம் குறிப்பாக, காா்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறோம்.
உள்ளுா் மக்கள் வேலைவாய்ப்பு பறிபோவதுடன், தனியாா் பாதுகாப்பு எந்த அளவுக்கு கோயிலின் பாதுகாப்பிற்கு உகந்ததாக இருக்கும் என்று தெரியவில்லை. அதனால் தனியாா் பாதுகாப்பு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என அக்கடிதத்தில் கூறியுள்ளாா்.