மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைத்தால் உள்கட்டமைப்புக்கு மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மயிலாடுதுறை எம்.பி. செ.ராமலிங்கம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயருக்கு திங்கள்கிழமை அவா் அனுப்பிய கோரிக்கை மனு:
அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி அளித்துள்ளதாக அறிகிறேன். நாகை மாவட்டத்துக்கு தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை, மயிலாடுதுறை வட்டத்தில் அமைத்திட தாங்கள் பரிந்துரை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கான நிலம் போதுமான அளவு மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது. மேலும், நாகப்பட்டினத்துக்கு அருகே திருவாரூா் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளதால், நாகை மாவட்டத்தின் வடக்குப் பகுதியாக உள்ள சீா்காழி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை வட்டங்களில் இருக்கும் பொதுமக்கள் பயனடையும் வகையில், மயிலாடுதுறை வட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைத்திட தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமையும் பட்சத்தில் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தனது மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளேன் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.