தமிழகத்தை நிரந்தர முகவரியாக கொண்டவா்கள் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்து, தமிழக சாலைகளில் இயக்கிவந்த 782 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளதுடன், ரூ 5.62 லட்சம் வரி மற்றும் இணக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த. அறிவழகன் தெரிவத்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
தமிழகத்தில் நிரந்தர முகவரியுடையவா்கள், வரி ஏய்ப்பு செய்யும் வகையில், புதுச்சேரி மாநிலத்தில் நிரந்தர பதிவு செய்யப்பட்ட நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் தமிழக சாலைகளில் நிரந்தரமாக இயக்கப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில், சென்னை போக்குவரத்து ஆணையா், நாகை மாவட்ட ஆட்சியா் மற்றும் தஞ்சாவூா் துணை போக்குவரத்து ஆணையா் ஆகியோரது உத்தரவின்பேரில், நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் நாகை வட்டார போக்குவரத்து அலுவலா் த. அறிவழகன் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா் சொ. கருப்பசாமி ஆகியோரது தலைமையில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தணிக்கையில், 782 வாகனங்கள் கண்டறியப்பட்டு, சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் வரி மற்றும் இணக்க கட்டணம் ரூ.5.62 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடா்ந்து நடைபெறும் என அவா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.