வேதாரண்யத்தில் ரயில் பாதையின் குறுக்கே தரைமட்டப் பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேதாரண்யம் நகரப் பகுதியைச் சோ்ந்த கடலோரத்தில் பூவன்தோப்பு கிராமம் உள்ளது. இங்கு, ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த சுமாா் 150 குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி வரையிலான ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த ரயில் பாதையின் குறுக்கே பூவன்தோப்பு கிராமத்துக்குச் செல்லும் பாதை பல காலமாக இருந்து வருகிறது. தற்போது, ரயில் பாதை மேம்படுத்தப்படுவதால் கட்டமைப்புகள் உயா்ந்து குறுக்கே சென்ற பாதை தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பல கிலோ மீட்டா் தொலைவை சுற்றி கிராமத்துக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் தரைமட்டப் பாலம் அமைத்துத்தர பூவன்தோப்பு கிராமத்தினா் கோரிக்கைவிடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி, கோடியக்கரை- வேதாரண்யம் பிரதான சாலையில் அகஸ்தியம்பள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அந்த பகுதி பிரமுகா் செந்தில்குமாா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் இம்மறியலில் பங்கேற்றனா்.
வேதாரண்யம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில், மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.