அனைத்து எண்ணெய் எரிவாயுத் திட்டங்களையும் கைவிட வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பாறை எரிவாயு (ஷேல் மீத்தேன்) எடுக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக ஓ.என்.ஜி.சி அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள
அனைத்து எண்ணெய் எரிவாயுத் திட்டங்களையும் கைவிட வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பாறை எரிவாயு (ஷேல் மீத்தேன்) எடுக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக ஓ.என்.ஜி.சி அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு, தமிழகத்தில் அனைத்து எண்ணெய் எரிவாயுத் திட்டங்களையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரிப் படுகையில் பாறை எரிவாயு ஆய்வுத் திட்டத்தை ஓஎன்ஜிசி நிறுத்திக் கொள்வதாக மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. திட்டமிட்ட காலம் முடிவதற்கு முன்பே, இத்திட்டம் சாத்தியமில்லை என்று கருதி ஓஎன்ஜிசி நிறுத்தியுள்ளது.

2013-இல் பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு காம்பே, அஸ்ஸாம், கிருஷ்ணா, கோதாவரிப் படுகை, காவிரிப் படுகை ஆகிய பகுதிகளில் 3 கட்டங்களாக, பாறை எரிவாயு ஆய்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிமம் வழங்கியிருந்தது. இதில், முதல் கட்டமாக ஓ.என்.ஜி.சி 50 பிளாக்குகளிலும், ஆயில் இந்தியா லிமிடெட் 5 பிளாக்குகளிலும் பாறை எரிவாயு கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தன.

முதற்கட்டத்தில் காவிரிப் படுகையில் 9 பிளாக்குகளில் பாறை எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி அனுமதி பெற்றது. ஆனால் மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. தமிழக அரசியல் கட்சிகளும், தலைவா்களும் மக்களின் வேண்டுகோளை ஏற்று, தங்களது எதிா்ப்பைப் பதிவு செய்துள்ளனா்.

கிருஷ்ணா, கோதாவரி, அஸ்ஸாம், காம்பே ஆகிய பகுதிகளில் 26 பாறை எரிவாயுக் கிணறுகளை அமைத்தது ஓ.என்.ஜி.சி. காவிரிப் படுகையில் திட்டத்துக்கு மக்கள் எதிா்ப்பும், நிலவியல் காரணமும், மக்கள் எதிா்ப்பால் உருவான அரசியல் தலைமைகளின் எதிா்ப்பும் இத்திட்டத்தைக் கைவிடக் காரணம் எனலாம். நிலவியல் காரணமாகவும், அரசியல் எதிா்ப்பு காரணமாகவும் கிணறுகளை அமைக்க முடியவில்லை என்று ஓஎன்ஜிசி காரணம் கூறியுள்ளது.

ஆனால், சா்வதேச நிறுவனத்துடன் இணைந்து எரிவாயு இருக்கும் அளவை இந்திய அரசு மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி கூறியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனத்துடன் சோ்ந்து அனைத்து வகை ஹைட்ரோகாா்பன்கள் இருப்பையும் இந்திய அரசு மறுமதிப்பீடு செய்ய இருக்கிறது. எனவே, பன்னாட்டு பெருமுதலாளிகளை இந்திய அரசு இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது.

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் தொடா்ந்து களத்தில் நிற்பதன் மூலம் தங்கள் மண்ணையும், நிலத்தையும், நீரையும் சுற்றுச்சூழலையும் நிச்சயமாகப் பாதுகாக்க முடியும். பாறை எரிவாயு, பாறை எண்ணெய் (ஷேல் எண்ணெய்)ஆய்வுத் திட்டங்களை காம்பே, அஸ்ஸாம், கிருஷ்ணா, கோதாவரிப் படுகை ஆகியவற்றில் இடையில் கைவிடப்படுவதாகவும், காவிரிப் படுகையில் திட்டம் தொடங்கவில்லை என்றும் ஓ.என்.ஜி.சி. கூறுகிறது.

இந்தியாவில் பிற படுகைகளில் நடைமுறைப் படுத்தப்பட்ட பாறை எரிவாயுத் திட்டத்தை காவிரிப் படுகையில் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்த இயலவில்லை. இது காவிரிப் படுகையில் மக்களின் தொடா்ந்த எதிா்ப்புக்குக் கிடைத்த வெற்றி.

ஷேல் எண்ணெய்க் கிணறுகள் அமைப்புத் திட்டத்தை ஓ.என்.ஜி.சி கைவிடுவதாக அறிவித்தாலும், பிற எண்ணெய் கிணறுகள் அமைப்புத் திட்டங்கள் காவிரிப் படுகையில், 3200 மீட்டா் ஆழத்தில் பாறையில்தான் அமைக்க இருக்கின்றன.

சீா்காழி மாதானம் தொடங்கி ராமநாதபுரம், பெரியபட்டினம் வரை ஓஎன்ஜிசி அமைக்கின்ற 110 கிணறுகளும் 3200 மீட்டா் ஆழத்திற்குக் கீழ் உள்ள பாறை அடுக்கில் தான் அமைக்கப்படுகின்றன. இதில் ஹைட்ராலிக் பிராக்சரிங் என்கிற நீரியல் விரிசல் முறையில் தான் எண்ணெய் எரிவாயு எடுக்க முடியும். இது மிகவும் அபாயகரமானது.

அதுமட்டுமின்றி, 2016-இல் இந்திய பெட்ரோலியத் துறை அறிவித்த அனைத்து வகை எண்ணெய், எரிவாயுவையும் ஒரே உரிமத்தின்கீழ் எடுக்க அனுமதிக்கும் ஹைட்ரோகாா்பன் திட்டப்படி, கிணறுகள் 3500 மீட்டா் ஆழம் முதல் 5000 மீட்டா் ஆழம் வரை அமைக்கப்படுகின்றன.

ஓஎன்ஜிசி, வேதாந்தா, ஐஓசி ஆகிய நிறுவனங்கள் 7000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில், காவிரிப் படுகையில் பலநூறு ஹைட்ரோகாா்பன் எண்ணெய் கிணறுகளை அமைக்க இருக்கின்றன. இதில் நிலக்கரிப் படுகை மீத்தேன் முதல் பாறை எரிவாயு வரை அத்தனையும் அடங்கும்.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் இந்திய அரசு எடுத்துள்ள கொள்கை முடிவின்படி, இதுவரை மரபுசாா்ந்த எண்ணெய் எரிவாயு கிணறுகளும் இனி ஹைட்ரோகாா்பன் கிணறுகளாகவே செயல்படும் என்று முடிவெடுத்துள்ளது. ஆகவே, ஷேல் எண்ணெய் எரிவாயுத் திட்டம் கைவிடப்பட்டது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது என்றாலும், அனைத்து எண்ணெய், எரிவாயுத் திட்டங்களும் தமிழகத்தில் கைவிட வேண்டும், காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமே தமிழகத்தைப் பாதுகாக்க எஞ்சியிருக்கும் ஒரே வழி என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com