மயிலாடுதுறை ரயிலடியில் உள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை ரயிலடி வடக்குத் தெருவில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், புதன்கிழமை காலை தரிசனம் செய்வதற்காக வந்த பக்தர்கள், கோயில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் துறையினருக்கு அளித்த தகவலின்பேரில், போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோயிலின் பக்கவாட்டில் உள்ள கதவின் பூட்டு மற்றும் மற்றொரு கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று கர்ப்பக்கிரகத்தின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளதும், அக்கதவின் பூட்டை உடைக்க முடியாததால், தாங்கள் வந்து சென்ற தடயங்களை அழிக்கும் முயற்சியாக, சிசிடிவி கேமரா உபகரணங்களை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. கர்ப்ப கிரகத்தின் பூட்டுகளை உடைக்க முடியாததால், இக்கோயிலில், பாதுகாக்கப்பட்டு வரும் பழைமை வாய்ந்த 4 உலோக சாமி சிலைகள் அதிருஷ்டவசமாக தப்பின. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை மயிலாடுதுறை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.