நாகை மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம், வட்டத்துக்கு ஒரு கிராமம் வீதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்புடைய ஊராட்சி அலுவலகத்தில் காலை 10 முதல் பகல் 1 மணி வரை இக்கூட்டம் நடைபெறும்.
நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்கள், குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்டவைகளுக்கு இந்தக் கூட்டத்தில் மனு அளித்துத் தீர்வுப் பெறலாம்.
வட்டம் - ஊராட்சி என்ற அடிப்படையில், கூட்டம் நடைபெறும் ஊராட்சிகளின் விவரம் : நாகப்பட்டினம் - அகலங்கன், கீழ்வேளூர் - வெங்கிடங்கால், திருக்குவளை - புத்தூர், வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளி, மயிலாடுதுறை - கொற்கை, தரங்கம்பாடி - அன்னவாசல், சீர்காழி - பாகசாலை, குத்தாலம் - மாந்தை.