நாகை மாவட்டம், திருக்கண்ணங்குடி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த
கோரிக்கை மனு:
கஜா புயல் சீற்றத்தின்போது, திருக்கண்ணங்குடி கிராமத்தில் நெல் பயிர்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகின. இதனால், கடுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 2018-2019-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீடாக திருக்கண்ணங்குடி கிராமத்துக்கு 6 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2017-2018-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு இழப்பீட்டில் திருக்கண்ணங்குடி புறக்கணிக்கப்பட்ட நிலையில், கஜா புயலாலும் பாதிப்புக்குள்ளான எங்கள் கிராமத்துக்கு உரிய பயிர்க் காப்பீடு இல்லை என்ற தகவல், விவசாயிகளை பெரும் வேதனையில் ஆழ்த்துவதாக உள்ளது.
எனவே, திருக்கண்ணங்குடி விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெல் மகசூல் இழப்பை ஈடு செய்யும் வகையில், உரிய பயிர்க் காப்பீடு இழப்பீட்டைப் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.