நாகப்பட்டினம்- திருவாரூர் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி விபத்து நேரிடுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் மேல கோட்டைவாசல் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் முன் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை குண்டும், குழியுமாக மாறியிருப்பதால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், இந்த இடத்தைக் கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அல்லல்படுகின்றனர்.
குறிப்பாக பாதசாரிகள் ஒதுங்குவதற்கு கூட வழியில்லாததால், சாலையில் செல்லும் வாகனங்கள் சேற்றை வாரி இரைக்கின்றன. இதனால், பள்ளி மாணவர்களும், அலுவலகம் செல்பவர்களும் கடும் இன்னலுக்குள்ளாகின்றனர்.
அத்துடன் இருசக்கர வாகனம், இலகுரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்க நேரிடுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைவது வாடிக்கையாகிவிட்டது. மேலும், மழை நீர் தேங்கி நிற்கும் இடம் மிகவும குறுகலாக இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்பதைக் காண முடிகிறது. எனவே இப்பகுதியில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும், சாலையோரங்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை நிரந்தரமாக சீரமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நாகை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.