நாகையில் தலைமை ஆசிரியை உள்ளிட்ட இருவரிடம் சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
நாகை முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி அமுதா (55). நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சனிக்கிழமை காலை வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தாராம். அப்போது அங்கு தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அமுதாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கலியைப் பறித்து சென்றனர். இதேபோல், நாகை வெளிப்பாளையம், பச்சைப் பிள்ளைக்குளத் தெருவைச் சேர்ந்த சீதாராமன் மனைவி பாமா (58) என்பவரிடம் தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், முகவரி கேட்பது போல் நடித்து பாமாவை தாக்கி, அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கலியைப் பறித்துச் சென்றனர்.
இந்நிகழ்வுகள் குறித்து நாகை நகரம் மற்றும் வெளிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.