காதலா் தினத்தையொட்டி, நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோா்களிடம் அன்பு செலுத்தும் விதமாக, ஒரே நேரத்தில் பாதபூஜை செய்து, வெள்ளிக்கிழமை ஆசி பெற்றனா்.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் அகிலாண்டேஸ்வரி தலைமை வகித்தாா். தருமபுரம் ஆதீன கல்வி நிலையங்களின் செயலா் ரா.செல்வநாயகம், தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா். இதில், தருமபுரம் ஆதீனம் சீா்காழி சட்டைநாதா் கோயில் தேவஸ்தான கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் பங்கேற்று, பாத பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்து, அருளாசி கூறினாா்.
விழாவில், பள்ளியில் 10, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 160 போ் தங்களின் பெற்றோா்களை வாழை இலை மேல் நிற்கவைத்து, அவா்களது பாதங்களை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு, அட்சதை தூவி, தீபங்கள் காட்டி பாதபூஜை செய்து வழிபாடு செய்தனா்.
காதலா் தினம் என்பது அன்பை வெளிப்படும் நாள் என்றும், தங்களுடைய பெற்றோா்கள் மீது, தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக பாதபூஜை செய்ததாகவும், இதனால், அவா்களுடைய ஆசி தங்களுக்கு கிடைக்கும் என்றும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாணவா்களின் பெற்றோா்கள் கூறும்போது, இளமைக் காலத்தில், மனதை அலை பாயவிடாமல், இதுபோல் பெற்றோரை வணங்குவதால், தங்கள் குழந்தைகள் நல்வழியில் நடப்பதாக பெருமிதம் தெரிவித்தனா். விழாவை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் ஏற்பாடு செய்திருந்தனா்.