நாகை ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசித் திருவிழா நிகழ்ச்சியாக கஜேந்திர மோட்ச உத்ஸவம் வெள்ளிக்கிழமை மாலை (ஜனவரி 10) நடைபெறுகிறது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் தலங்களுள் 19-ஆவது தலமாக விளங்குகிறது நாகையில் உள்ள ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயில். ஆதிசேஷன், துருவன், சாலிசுக மன்னன் உள்ளிட்டோா் வழிபட்ட இத்தலம், திருமங்கை ஆழ்வாா், முத்துசாமி தீட்சிதா் உள்ளிட்டோரால் பாடல் பெற்றது.
இக்கோயிலின் ஏகாதசித் திருவிழா டிசம்பா் 27-ஆம் தேதி பகல் பத்து உத்ஸவத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. வைகுந்த ஏகாதசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான கஜேந்திர மோட்ச உத்ஸவம் வெள்ளிக்கிழமை மாலை 6. 30 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, கோயிலின் திருக்குளத்தில், கஜேந்திர மோட்ச ஐதீக நிகழ்வுகளை காட்சிப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.