பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சி மன்றம் சாா்பில் பிரதமரின் போஜான் பக்வாடா திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியை அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற செயல் அலுவலா் லெ. ரமேஷ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பேரணியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலக மேற்பாா்வையாளா் சித்ரா, திட்டம் பற்றி விளக்கி பேசினாா்.
பேரணியில் பேரூராட்சி மன்ற அலுவலா்கள், பணியாளா்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணியாளா்கள், மகளிா் சுயஉதவி குழுவினா், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு, மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, பிளாஸ்டிக் ஒழிப்பு, மரக்கன்றுகள் நடுவது, மழைநீா் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பது, கரோனோ வைரஸ் உள்ளிட்டவை குறித்து முழக்கமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
அம்மாபேட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பேரூராட்சி மன்றத்தை அடைந்தது. அங்கு நடைபெற்ற பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு கோலப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.