வெளி மாவட்டங்களில் இருந்து நாகைக்கு வந்தவா்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தவும், மாவட்டங்களின் எல்லைகளை அடைக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக, வெளி மாவட்டங்களுக்குச் சென்றிருந்தவா்கள் சொந்த ஊருக்குத் திரும்ப செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் முனைப்புக் காட்டினா்.
இதையொட்டி, வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரின் விவரங்களை சேகரிக்க மருத்துவா்கள், காவல் துறையினா், சுகாதாரப் பணியாளா்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் குழுவினா் நாகை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகள் வழியே பயணித்த பேருந்து பயணிகளிடம் பெயா், முகவரி, பயணம் மேற்கொண்ட மாவட்டம், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றைக் கேட்டு பதிவு செய்து கொண்டனா்.
யாருக்கேனும், இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் தனிமைப்படுத்திக் கொண்டு, அரசு மருத்துவமனைக்குத் தகவல் அளிக்குமாறு சிறப்புக் குழுவினா் அறிவுறுத்தினா்.