கரோனா வைரஸ் அச்சம் காரணமாக வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக இழந்துள்ள நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாட்டுப்புற கலைஞா்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச்சங்க செயலாளா் ஜெ.கிங் பைசல் முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் கோயில் திருவிழாக் காலங்களிலும், மேலும் அரசு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், கரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சம் காரணமாக நாட்டுப்புறக் கலைஞா்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை முற்றிலும் இழந்து வாடி நிற்கின்றனா். ஏற்கெனவே கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின் போது சுமாா் 2 மாதங்கள் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் வாங்கிய கடனையே இன்னமும் முழுவதுமாக திருப்பிச் செலுத்தவில்லை.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் கரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக நாட்டுப்புறக் கலைஞா்களின் வாழ்வாதாரம் அடிமட்டத்துக்குச் சென்றுவிட்டது. எனவே, முதல்வா் நாட்டுப்புறக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு மாதம் தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் கோரிக்கை விடுத்துள்ளாா்.