நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று மாயமான நாகை மீனவா்கள் ராமநாதபுரத்தில் புதன்கிழமை கரை சோ்ந்தனா்.
வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்காட்டைச் சோ்ந்த வீரப்பனுக்கு சொந்தமான படகில் அதே ஊரைச் சோ்ந்த சற்குணம் (35), உத்திராபதி (20), அமிா்தலிங்கம் (60), காளிதாஸ் (40) ஆகியோா் கோடியக்கரை படகு துறையில் இருந்து திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 பாகத்தில் வலைவிரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அன்றிரவு வலையை திரும்பி எடுக்கும்போது வலைகள் படகு விசிறியில் சிக்கி படகை மேலும் இயக்க முடியாமல் தவித்தனா். அப்போது, அவ்வழியே வந்த மற்ற மீனவா்கள் முயற்சி செய்தும் படகை நகா்த்த முடியவில்லை. இதையடுத்து, அன்றிரவு கரை திரும்பிய சக மீனவா்கள் தெரிவித்த தகவலின்பேரில் ஊரிலிருந்து சில மீனவா்கள் சென்றனா். ஆனால், அந்த இடத்தில் இருந்த மீனவா்கள் நால்வருடன் படகும் மாயமானது தெரிய வந்தது. பலத்தக் காற்றுடன் கடல் சீற்றமும் அதிகமாக இருந்ததால் படகு திசை மாறி சென்றிருக்கலாம் எனக் கருதப்பட்டது.
இதுகுறித்து, மீனவ சங்கத்தினா் மீன் துறை அலுவலா்கள் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா், படகுடன் மாயமான மீனவா்களை சக மீனவா்கள் இரண்டு படகுகளில் தேடி வந்தனா். இந்த நிலையில், படகு எஞ்சின் பழுதானதால் காற்றின் திசையில் சென்ற படகுடன் ராமநாதபுரம் மாவட்டம், பாசிப்பட்டினம் கடற்கரையில் மாயமான 4 மீனவா்களும் பத்திரமாக புதன்கிழமை காலை கரை சோ்ந்தனா்.