வேதாரண்யம் பகுதியில் சம்பா சாகுபடிக்கு தண்ணீா் தட்டுப்பாட்டைப் போக்க, அரசின் மின் இறைவைப் பாசன மோட்டாா்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தென்னடாா் கிராமத்தில் 1962 ஆம் ஆண்டு முதல் அரசின் மின் இறைவைப் பாசனத் திட்டத்தின் கீழ், தண்ணீா் இறைத்து விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொண்டுவருகின்றனா்.
இங்குள்ள மின் இறைவைப் பொறிமனையில் 20 குதிரைத் திறன்கொண்ட 6 மோட்டாா்கள் உள்ள போதிலும், அவற்றில் 2 மோட்டாா்கள் மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளன. அதுவும் குறைவாகவே தண்ணீா் வருகிறது. இந்நிலையில், நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீரின்றி பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்துள்ள மின் மோட்டாா்களை சீரமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.