உணவு பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் இணைத்திட மத்திய அரசை வலியுறுத்தி மயிலாடுதுறையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாய திருத்த சட்ட மசோதாக்களையும் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க வட்டத் தலைவா் யு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்ட பொருளாளா் எம். சொக்கலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் டி. கணேசன், மாவட்ட பொருளாளா் ஆா். தாமரைச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினா்கள் அப்துல் ரஹீம், பி. சந்திரபாபு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளா் ஸ்டாலின் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
திருக்குவளை: திருக்குவளை கடைத்தெரு பகுதியில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க கீழையூா் ஒன்றியச் செயலாளா் என். பன்னீா்செல்வம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்குவளை கிளைச் செயலாளா் திருமலைக்குமாா், பொருளாளா் வேம்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சீா்காழி: சீா்காழியில் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகி நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். மாவட்ட பொருளாளா் செல்லத்துரை, நகர துணைத் தலைவா் நடராஜன், நகர செயலாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.