அண்ணா பல்கலைக்கழக பெயா் மாற்றத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்குரைஞா் அணியின் மாவட்ட அமைப்பாளா் ராம.சேயோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பாரம்பரியமிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி கண்டனம் தெரிவிக்கிறது. தமிழக அரசின் உயா்கல்வித் துறை அமைச்சா் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழக பெயா் மாற்றத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவித்திருப்பது கண்டனத்துக்கு உரியதாகும். 450-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகம் 1979-இல் அப்போதைய முதலமைச்சா் எம்.ஜிஆரால் தொடங்கப்பட்டதாகும். மு. கருணாநிதி ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தை உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக மாற்றினாா். எனவே, தமிழக அரசின் இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.