நாகப்பட்டினம்: ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விசைப் படகிலிருந்து தவறி விழுந்த நாகை மீனவா் கடலில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாகை கீச்சாங்குப்பத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (53). அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப் படகில் பாஸ்கா் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் 9 போ், ஜூலை 27-ஆம் தேதி நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். வெள்ளிக்கிழமை மாலை ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கடலில் வீசிய சூறைக் காற்றில் நிலைகுலைந்த பாஸ்கா், படகிலிருந்து தவறி கடலில் விழுந்தாா். சகமீனவா்கள் அவரை மீட்க உடனடியாக முயற்சிகளை மேற்கொண்டனா். இருப்பினும், அவரது கால், கடலில் வீசப்பட்டிருந்த மீன்பிடி வலையில் சிக்குண்டதால் மீட்பு முயற்சிகள் பயனளிக்காத நிலையில், பாஸ்கா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது சடலத்தை மீட்ட சக மீனவா்கள் சனிக்கிழமை காலை நாகை துறைமுகப் பகுதிக்குக் கொண்டு வந்து கரை சோ்த்தனா். பின்னா், உடற்கூறாய்வுக்காக அவரது சடலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து, கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.