மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28வது தலமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு காலை சிறப்பு திருமஞ்சனம், சாத்து முறை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் நவரத்தினஅங்கி அலங்காரதத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருள திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து அதிகாலை 3:30 மணிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அங்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். தொடர்ந்து கோவிலின் உட்பிராகாரத்தில் உத்சவர் பெருமாள் சுற்றி வந்து கோவிலின் உள்ளே உள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அருள் பாலித்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொர்க்கவாசல் திறக்கும் நேரத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை, அதைத் தொடர்ந்து சுமார் 6.30 மணியளவில் இருந்து பக்தர்களுக்கு பெருமாளை தரிசிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவில் உள்ளே தரிசனம் செய்யும் பக்தர்கள் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ரெங்கா, ரெங்கா என கோஷமிட்டு பெருமாளையும், ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசனம் கிடைக்கும் பெருமாளின் வலது திருவடியையும், ஓரடி உயரமுள்ள தவிட்டு தாடாளன் பெருமாளையும் பக்தர்கள் சேவித்தனர்.