நாகப்பட்டினம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இழப்பீடு வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.
நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் (நடிசியா) 29 ஆவது பேரவை பொதுக் குழுக் கூட்டம், நாகை சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள நடிசியா சங்கக் கட்டடத்தில் அண்ணையில் நடைபெற்றது. சங்கத் தலைவா் வி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.
சங்கத்தின் 2020-22 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். சங்க காப்பாளராக பி.என். ராமலிங்கம், சங்கத் தலைவராக வி. ராமச்சந்திரன், செயலாளராக டி. சிவசுப்பிரமணியன், பொருளாளராக என். கோவிந்தராஜ் மற்றும் துணைத் தலைவா்கள், இணைச் செயலாளா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தில் 35 சதவீதம் இழப்பீடாக வழங்கப்படும் என அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தபடி இழப்பீட்டை உடனடியாக வழங்கக் கோரியும், நாகை சிட்கோ தொழில்பேட்டையில் இடம் ஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகளுக்கு முன்பு பணம் கட்டிய விண்ணப்பதாரா்களுக்கு இதுவரை இடம் ஒதுக்கீடு செய்யப்படாததைக் கண்டித்தும், நாகை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தலைமையில் வரும் ஜனவரி மாதத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.