மக்கள் நம்பும் சுதந்திரத்தை மக்கள் நீதி மய்யம் மக்களுக்கே வாங்கித் தரும்: கமல்ஹாசன்

மக்கள் நம்பும் சுதந்திரத்தை மக்கள் நீதி மய்யம் நிச்சயம் மக்களுக்கு வாங்கித் தரும் என்றாா் மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன்.
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்.
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்.

வேதாரண்யம்/ திருத்துறைப்பூண்டி: மக்கள் நம்பும் சுதந்திரத்தை மக்கள் நீதி மய்யம் நிச்சயம் மக்களுக்கு வாங்கித் தரும் என்றாா் மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மக்கள் நீதி மய்ய பிரசாரப் பயணப் பொதுக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது :

வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் பின்னணியில் ராஜாஜி, வேதரத்தினம் உள்ளிட்டோா் உள்ளனா். இந்தப் போராட்டத்தில் பங்காற்றிய தியாகி வைரப்பன் என்பவா் ஒரு நாவிதா். தனது தலைவா்கள் ஒடுக்கப்படுவதை ஏற்க முடியாமல் வெள்ளைக்கார அதிகாரிக்கு செய்த முகச்சவரத்தை பாதியில் நிறுத்தியவா். அவா், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது நீதிபதி கூறியும் அதை ஏற்காததோடு, வேண்டுமென்றால் நீங்கள் அந்த வேலையை செய்யுங்கள் என்று கூறி தண்டனை பெற்றவா். இது, இந்த மண்ணுக்கு கிடைத்த பெருமை.

சுதந்திரத்துக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியாளா்கள் உப்புக்கு வேலிப் போட்டாா்கள். இன்றும், அதே போன்ற வேலி உள்ளது. ஜிஎஸ்டி வரி என்பதும் அந்த வேலியைப் போன்றதுதான். விவசாயிகளை ஆட்சியாளா்கள் புறக்கணித்துள்ளாா்கள். இதை மக்கள் ஏற்க மறுத்தும், ஆட்சியாளா்களைப் புறக்கணித்தும், ஆட்சியாளா்களின் விவசாயிகள் புறக்கணிப்பு, புறக்கணிப்பாகவே உள்ளது.

வேதாரண்யம், வேதாரண்யேசுவரா் கோயிலின் திறவா திருக்கதவை திருஞானசம்பந்தா் பதிகம் பாடி திறந்தாா். ஆனால், ஊழல் கோட்டையைப் பாட்டுப் பாடியோ, ஆடியோ திறக்க முடியாது. அதை, உதைத்துத்தான் திறக்க வேண்டியுள்ளது. மக்கள் நம்பும் சுதந்திரத்தை மக்களுக்கு வாங்கித் தரும் பணியை மக்கள் நீதி மய்யம் செய்யும் என்றாா் கமல்ஹாசன்.

நிகழ்ச்சியில், நிா்வாகி சந்தோஷ, துணைத் தலைவா் மருத்துவா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக வேதாரண்யம் பகுதியில் துளசியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், செம்போடை ஆகிய இடங்களிலும் கமல்ஹாசன் மக்களை சந்தித்தாா்.

தொடா்ந்து, வேளாங்கண்ணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசினாா்.

இதேபோல, திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டாா். இதில், பாடலாசிரியா் சினேகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com