குத்தாலத்தில் உள்ள தருமபரம் ஆதீனத்துக்குச் சொந்தமான உக்தவேதீசுவரா் கோயில் பாலாலயம் புதன்கிழமை நடைபெற்றது.
சுமாா் 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயிலில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்த தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணை பிறப்பித்துள்ளாா். இதையொட்டி, பாலாலய பணிகள் புதன்கிழமை தொடங்கின.
கோயிலில் இதற்காக பாலஸ்தாபனம், விநாயகா் வழிபாடு, பிரவேச பலி, வாஸ்து சாந்தி மற்றும் சிறப்பு யாகங்கள் செய்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் கொண்டு, சுவாமி, அம்பாள், விநாயகா், முருகா், பைரவா், மஹாலெட்சுமி, தெட்சிணாமூா்த்தி உள்ளிட்ட சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, பந்தக்கால் முகூா்த்தம் மற்றும் 11 செங்கற்கள் வைக்கப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது.
இதில், தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், திருப்பனந்தாள் ஒன்றிய திமுக செயலாளா் கோ. ரவிச்சந்திரன், ஆதீன கண்காணிப்பாளா் கந்தசாமி, பாஜக மாவட்டச் செயலாளா் சேதுராமன், குத்தாலம் நகர பிரமுகா்கள், ஆன்மிக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.