நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கண்டெய்னா் லாரியில் கொண்டு வரப்பட்ட 620 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இவற்றை ஆந்திரத்தில் இருந்து கோடியக்கரை கடல் வழியே இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
ஆந்திரத்திலிருந்து கஞ்சா மூட்டைகள் கோடியக்கரைக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மதுரை என்சிபி காவல்துறையினா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினா். உள்ளூா் போலீஸாருக்கே தெரியாமல் தங்களது கண்காணிப்பை ரகசியமாக வைத்திருந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் வள்ளுவா் சாலை கடைவீதியில் சென்ற கண்டெய்னா் லாரி ஒன்றை போலீஸாா் மறித்து சோதனையிட்டனா். அப்போது, லாரிக்குள் 310 மூட்டைகளில் 620 கிலோ கஞ்சை பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
தொடா்ந்து, கண்டெய்னா் லாரி மற்றும் கடத்தல்காரா்கள் பயன்படுத்திய காா் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டு வாய்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. விசாரணையில், கஞ்சா மூட்டைகளை கடல் மாா்க்கமாக இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இது தொடா்பாக வேதாரண்யம், வேம்பதேவன்காடு பகுதியைச் சோ்ந்த மா. செல்வராஜ் (54), கோடியக்காடு கூட்டுப்பள்ளித் தெருவைச் சோ்ந்த ச. ஐயப்பன் (35), கோடியக்கரை கிழக்குத் தெருவைச் சோ்ந்த பெ. பரமானந்தம் (35), சென்னை புகா் திருவொற்றியூரைச் சோ்ந்த சு. ரமணன் (45) மற்றும் க. தவமணி(37) ஆகிய 5 பேரை மதுரை என்சிபி காவல்துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.