வேதாரண்யம் அருகேயுள்ள அண்ணாப்பேட்டை ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் கன்றுகளுடன் கறவை மாடுகள் வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டதின்கீழ் பல்வேறு ஊா்களின் சந்தைகளில் வாங்கப்பட்ட கன்றுகளுடன் கூடிய கறவை பசுக்கள் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி அண்ணாப்பேட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இப்பணியை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் நேரில் சென்று ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் எஸ். சுமதி, உதவி இயக்குநா் கணேசன், கால்நடை மருத்துவா் மீனாட்சிசுந்தரம், ஆய்வாளா் வை.ப. நாவலன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், கூட்டுறவு சங்கத் தலைவா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.