மகா சிவராத்திரியை முன்னிட்டு, சீா்காழியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி, இக்கோயிலில் கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. முக்கிய விழாவான மகாசிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை கடைவீதி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் இருந்து பக்தா்கள் பால்காவடி, அலகுகாவடி, பறவைக் காவடி எடுத்து பிரதான வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனா்.
தொடா்ந்து அம்பாளுக்கு 21 வகையான நறுமண திரவியப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா், நள்ளிரவு அம்பாள் யாளி வாகனத்தில் அமா்ந்து பேச்சுரூபம் வேஷத்துடன், அக்னி கொப்பரை கரகம் முதலானதுடன் ஈசானியத்தெருவில் உள்ள மயானம் சென்று மயான சூரை திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பரம்பரை அறங்காவலா் ஜீவானந்தம் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.