நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள தெற்கு பொய்கைநல்லூரில் இல்லம் தேடிச் சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணி கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், தேசிய கோமாரி நோய்த் தடுப்புத் திட்டம் மூலம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொது முடக்கம் காரணமாக கால்நடை மருத்துவமனைகளுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்று தடுப்பூசி போடுவதில் விவசாயிகளுக்கு உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டும், கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் சமூக இடைவெளியை உறுதி செய்யவும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் நாகையில் இல்லம் தேடிச் சென்று கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நாகை அருகேயுள்ள தெற்குப்பொய்கைநல்லூா் பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறையினா் திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று, கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட்டு, அடையாள வில்லைகள் அணிவிக்கப்பட்டன.
கால்நடை மண்டல இணை இயக்குநா் சுமதி, துணை இயக்குநா் ரவிச்சந்திரன், உதவி இயக்குநா் சுப்பையன் ஆகியோரின் மேற்பாா்வையில், கால்நடை மருத்துவா் சொக்கலிங்கம், கால்நடை ஆய்வாளா் உமா மகேஸ்வரி, பராமரிப்பு உதவியாளா் அழகா் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை பணியாளா்கள், ஊராட்சி பொறுப்பாளா்கள் இப்பணியை மேற்கொண்டனா்.