நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலோரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பலத்த சூறைக் காற்றுடன் இடியுடன் கூடிய மழைப் பொழிந்தது.
வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் பரவலாக மழைப்பொழிவு ஏற்பட்டது. இந்த மழைப்பொழிவுக்கு முன்பாக கடலோரப் பகுதியை சார்ந்த வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் வடமேற்கு திசையில் இருந்து பலத்த சூறைக்காற்று வீசியது.
சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்ததோடு, வைக்கோல் போர்கள், கூரைகள் பாதிக்கும் அளவில் இருந்தது. இந்த காற்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இந்த பகுதியில் மழையின் அளவு அதிகமாக உணரப்பட்டன. காற்றின் காரணமாக வட மழை மணக்காடு கடைவீதியில் பல ஆண்டுகளாக உள்ள பெரிய ஆலமரத்தில் பெயர்ந்த ராட்சத கிளை செவ்வாய்க்கிழமை காலையில் பிரதான சாலை பகுதியில் விழுந்தது.
இதில் அந்த பகுதியில் இருந்த இரண்டு கடைகள் சேதமடைந்தன. மழையின் காரணமாக மின் விநியோகம் அவ்வப்போது பாதிக்கப்பட்டது.